விவசாயிகளுக்கு உழவன் செயலி குறித்து செயல்முறை விளக்கம் அளித்த போது எடுத்த படம். 
உள்ளூர் செய்திகள்

உழவன் செயலி குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்

வாசுதேவநல்லூர் அருகே உள்ள நாரணாபுரம் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் ஊரக பணி அனுபவ திட்டத்தின் கீழ் பயிர் சுழற்சி மற்றும் உழவன் செயலி குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.

சிவகிரி:

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நாரணாபுரம் கிராமத்தில் தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி மாணவிகள் ஊரக பணி அனுபவ திட்டத்தின் கீழ் பயிர் சுழற்சி மற்றும் உழவன் செயலி குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.

பயிர் சுழற்சி என்பது தொடர்ந்து ஒரே வகையான பயிரினை நிலத்தில் விளைவிப்பதற்கு பதிலாக மாற்றுப் பயிர்களை பயிர் செய்வதாகும்.

அதிக ஊட்டச்சத்து மிக்க பயிருக்கு பின் குறைந்த ஊட்டச்சத்து மிக்க பயிர்களை பயிரிடலாம்.  இதில் மாணவிகள் விவசாயி களுக்கு உழவன் செயலி பற்றியும் கூறினர்.

விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு 2019&ம் வருடம் உழவன் செயலியை அறிமுகப்படுத்தியது. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வகுக்கப்பட்டுள்ள உழவன் செயலி மூலம் விவசாயிகளின் வேளாண்மை தொடர்பான அனைத்து திட்டங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

இந்த உழவன் செயலியை பயன்படுத்தி வேளாண் தொடர்பான பரிந்துரைகளை பெறுவதுடன் பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளும் தங்களின் பயிர் காப்பீடு தொடர்பான விவரங்களையும், தங்கள் வட்டாரத்தில் உள்ள அரசு தனியார் கடைகளில் உரம் விதை இருப்பு விவரங்களையும், வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு பயன்படுத்திக் கொள்ள அரசு மற்றும் தனியார் மையங்களை தொடர்பு கொள்ளும் வசதி ஆகியவையும் இந்த உழவன் செயலில் உள்ளன.

இந்த செயல் விளக்கங்களை மாணவிகள் சுகந்தி, சரஸ்வதிதேவி, சவுந்தர்யா மற்றும் சினேகா ஆகியோர் விவ சாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.