நெல்லை:
சுரண்டை அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரன்(வயது 61). இவர் சாம்பவர்வடகரை சாலையில் சொந்தமாக பழைய பொருட்கள் சேகரிக்கும் கடை நடத்தி வருகிறார்.
இங்கு பழங்கால பொருட்கள், ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவற்றையும் சேகரித்து பாதுகாத்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.
நேற்று அதிகாலை கடைக்குள் 2 மர்ம நபர்கள் புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த விலை உயர்ந்த பழங்கால பொருட்களை திருடிவிட்டு கடையில் இருந்து வெளியே வந்துள்ளனர். அப்போது அந்த பகுதியில் உள்ள வீட்டில் இருந்து ஒருவர் வெளியே வந்துள்ளார். அவர் மர்மநபர்களை கண்டதும் சத்தம் போட்டுள்ளார்.
உடனே 2 பேரும் திருடிய பொருட்களை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பாக சந்திரன் அளித்த புகாரின்பேரில், சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.