சுரண்டை நகராட்சி 
உள்ளூர் செய்திகள்

சுரண்டை நகராட்சியில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை

சுரண்டை நகராட்சியில் 4 முனை போட்டியால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அங்கு பதவியை பிடிக்க தி.மு.க.வுடன் காங்கிரஸ் கைகோர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாலை மலர்

சுரண்டை:

தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இங்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜனதா நிர்வாகிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் சுரண்டையில் காங்கிரஸ் கட்சியினர் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தனர். அதன்படி காங்கிரசும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியது.

இதனால் அங்கு 4 முனை போட்டி நிலவியது. நேற்று வெளியான தேர்தல் முடிவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

காங்கிரஸ் 10 இடங்களிலும், தி.மு.க. 9 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதுதவிர அ.தி.மு.க. 6 இடங்களிலும், தே.மு.தி.க. மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தலா 1 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

நகராட்சியை கைப்பற்ற குறைந்தபட்சம் 14 வார்டுகளில் வென்றாக வேண்டும். தற்போது எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாமல் போய்விட்டது.

இதனால் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் ஒன்றாக கைகோர்த்து நகராட்சியை கைப்பற்ற வாய்ப்பு அதிகமாக உள்ளது.

அதேநேரத்தில் நகரசபை தலைவர் பதவி தி.மு.க.வுக்கா அல்லது காங்கிரசுக்கா என்பதில் கடும் போட்டி நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது.