சிறப்பு அலங்காரத்தில் அம்மன். 
உள்ளூர் செய்திகள்

சிவகிரி அருகே தேவிபட்டணம் காளியம்மன் கோவில் வருஷாபிஷேகம்

சிவகிரி அருகே தேவிபட்டணம் காளியம்மன் கோவிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது.

மாலை மலர்

சிவகிரி:

சிவகிரி அருகே உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற தேவிப்பட்டணம்  தட்டாங்குளம் காளியம்மன் கோவில் மிக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவில் 9-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா உத்திராட நட்சத்திரமும், பஞ்சமி திதியும் சித்த யோகமும் கூடிய சுபதினத்தில் நடைபெற்றது.

நேற்று காலை கோவில் முன்பு யாகசாலையில் அக்னி வளர்க்கப்பட்டு பல்வேறு பூஜைகள் யாகங்கள் நடத்தப்பட்டன. மூலவரான காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் அனைத்திற்கும் பால், தயிர், நெய், சந்தனம், குங்குமம், இளநீர் மற்றும் 18 வகையான நறுமண பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

சந்தனக்காப்பு அலங்காரம், வண்ண மலர்களால் அலங்காரம், பட்டுச் சேலைகள் அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டி பூஜைகள் நடைபெற்றது. 108 சங்கு அபிஷேக பூஜையும் நடைபெற்றது.

பக்தர்களுக்கு விபூதி, குங்குமம், சந்தனம், பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் அன்னதானம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை பவுர்ணமி பூஜை வழிபாட்டு குழு நிர்வாகிகள், தலைவர் மோகன கிருஷ்ணன், பொருளாளர் கிருஷ்ணசாமி செட்டியார், செயலாளர் சக்திவேல், சேத்தூர் காளி மாணிக்கவாசகம், உறுப்பினர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.