சிவகிரி:
தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டியிலிருந்து விருது நகர் மாவட்டம் ராஜ பாளையத்திற்கு செல்வதற்காக செங்கல் ஏற்றிக் கொண்டு ஒரு டிராக்டர் வந்து கொண்டிருந்தது.
டிராக்டரை சொக்கம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சந்தனபாண்டி (வயது43) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் இதே ஊரைச் சேர்ந்த மாதேஷ் (16) என்பவரும் சென்றார்.
இந்நிலையில் செங்கோட்டை யில் இருந்து வேளாங்கண்ணி செல்வதற்காக அரசு விரைவு பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சை கடையம் தங்க மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் (50) ஓட்டிவந்தார்.
சிவகிரி பகுதியில் உள்ள தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது எதிர்பாராதவிதமாக முன்பாக சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது அரசு பஸ் மோதியது. டிராக்டரில் இருந்த மாதேஷ் டிராக்டரிலிருந்து தூக்கி எறியப் பட்டு பலத்த காயமடைந்தார்.
சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் போலீசார் சென்று படுகாயமடைந்த மாதேஸை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக் காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.