கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

புளியரை சோதனை சாவடியில் இன்று மீண்டும் அதிரடி-கேரளாவுக்கு அதிகளவு கனிம வளங்கள் கொண்டு சென்ற லாரிகளுக்கு அபராதம்

கேரளாவுக்கு அதிகளவு கனிம வளங்கள் கொண்டு சென்ற லாரிகளுக்கு புளியரை சோதனை சாவடியில் வைத்து அபராதம் விதிக்கப்பட்டது.

மாலை மலர்

செங்கோட்டை:

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக கேரளாவுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புளியரை சோதனை சாவடி வழியாக கேரளாவுக்கு  கனிமவளங்கள் கடத்தப்படுவதாக பொது மக்களிடம் இருந்து  போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜிக்கு புகார்கள் சென்றது.

 இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் கடந்த 16-ந் தேதி புளியரை  சோதனை சாவடியில் திடீர் வாகன சோதனை மேற் கொண்டனர். அப்போது ஏராளமான லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக எடையில் கனிம வளங்கள் கடத்தப்படுவது தெரியவந்தது.

அப்போது விதமுறைகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.  தொடர்ந்து புளியரையில் கனிமவளங்கள் ஏற்றிவரும் வாகனங்கள் முழுவதும் தடுத்து நிறுத்தி முழு சோதனை பின் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் கனிமவள தடுப்பு பிரிவினர் இன்று அதிகாலை முதல் மீண்டும் புளியரையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்ற ராட்சத லாரிகளை அங்கிருந்த எடை நிலையத்திற்கு கொண்டு சென்று  எடை போடப்பட்டது.

அப்போது அதிகபாரம் ஏற்றி சென்ற வாகனங்களுக்கு டன்னுக்கு ரூ. 1000 வீதம் ஒவ்வொரு லாரிக்கும் சுமார் ரூ. 20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.