கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

தென்காசி வழியாக சென்னை சென்ற தாமிரபரணி சிறப்பு ரெயிலுக்கு பாவூர்சத்திரத்தில் உற்சாக வரவேற்பு

தென்காசி வழியாக சென்னை சென்ற தாமிரபரணி சிறப்பு ரெயிலுக்கு பாவூர்சத்திரத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாலை மலர்

வீ.கே.புதூர்:

நெல்லையில் இருந்து பாவூர்சத்திரம் வழியாக சென்னைக்கு  நேற்று முதல் ஜூன் 26-ந்தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் தாமிரபரணி சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

அதன்படி நேற்று இரவு 7 மணிக்கு புறப்பட்ட ரெயில் இன்று காலை 9.20-க்கு தாம்பரத்தை சென்றடைந்தது. இந்த ரெயில் இன்று தாம்பரத்தில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு நாளை காலை 10.35 மணிக்கு நெல்லை வந்தடைகிறது.

நெல்லையில் இருந்து நேற்று இரவு புறப்பட்டு பாவூர்சத்திரம் வந்த தாமிரபரணி சிறப்பு ரெயிலின் ஓட்டுனர்களுக்கு தனுஷ் குமார் எம்.பி., தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோர் சால்வை அணிவித்தனர்.

தொடர்ந்து அவர்களுக்கு இனிப்புகள் வழங்கியும், சிறப்பு ரெயிலுக்கு மலர்மாலை அணிவித்தும்  உற்சாக வரவேற்பளித்தனர்.

இந்நிகழ்வில் சமூக ஆர்வலர் பாண்டியராஜா, கீழப்பாவூர் யூனியன் தலைவர் காவேரி, நெல்லை தெட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன்,  கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சீனிதுரை, மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.