குற்றாலத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் அய்யாத்துரைபாண்டியன் பேட்டியளித்த காட்சி. 
உள்ளூர் செய்திகள்

ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி நல்ல முடிவுகளை வெளியிடுவேன்-அய்யாத்துரை பாண்டியன் பேட்டி

ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி நல்ல முடிவுகளை வெளியிடுவேன் என அய்யாத்துரை பாண்டியன் பேட்டியளித்தார்.

மாலை மலர்

தென்காசி:

தென்காசி வடக்கு மாவட்ட அ.ம.மு.க.  செயலாளர் அய்யாத்துரை பாண்டியனை அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று   அய்யாத்துரை பாண்டியன் குற்றாலத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தலில் அ.ம.மு.க. சார்பில்  போட்டியிட மறுத்து பலர் விலகிச் சென்ற நிலையில் 100-க்கும் அதிகமான வேட்பாளர்களை  நிறுத்தி தமிழகத்திலேயே அ.ம.மு.க.விற்கு அதிகமான வாக்குகளைப் பெற்ற மாவட்டம் தென்காசி வடக்கு மாவட்டம் என மாற்றினேன்.

அதனைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றதோடு மட்டுமல்லாமல் பண்பொழி,  அச்சன்புதூர் பேரூராட்சியில் பேரூராட்சி தலைவரை நிர்ணயம் செய்யும் இடத்தில் அ.ம.மு.க.  இருந்த பட்சத்தில் 2 பேரூராட்சி துணைத் தலைவர் பதவிகளை பெற்றுக் கொடுத்துள்ளேன்.

தென்காசி வடக்கு மாவட்ட அ.ம.மு.க. கட்சி வளர்ச்சியை கண்டு பொறுக்க முடியாமல் எனது சுய கவுரவத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பல்வேறு பிரச்சினைகளை மண்டல செயலாளர் ஏற்படுத்தினார்.

இந்த விபரம் அனைத்தையும் பொதுச் செயலாளர் என்ற முறையில் டி.டி.வி. தினகரனிடம் எழுத்துமூலம் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இருந்த போதிலும் கட்சியின் நலன் கருதி அவமானங்களை தாங்கிக் கொண்டு கட்சி பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தேன்.

இந்நிலையில் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணாக செயல்பட்டதாக என்னை கட்சியில் இருந்து நீக்குவதாக டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.  என்னை தவறான காரணங்களை கூறி மாவட்ட செயலாளர் பதவியில் இருந்தும், கட்சியிலிருந்து நீக்கி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

 நான் அ.ம.மு.க.வில் இல்லா விட்டாலும் மக்களுக்-கான என்னுடைய சமூக சேவை வழக்கம் போல் தொடரும்.  நான் விரைவில் என்னுடைய ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்தி அரசியல் ரீதியாக நல்ல முடிவுகளை வெளியிடுவேன்.  இவ்வாறு அவர் கூறினார்.