அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் மற்றும் நிர்வாகிகள் மனு கொடுத்த காட்சி. 
உள்ளூர் செய்திகள்

தென்காசியில் இருந்து சுரண்டை, கடையத்திற்கு அதிகாலையில் பஸ் இயக்க கோரிக்கை

தென்காசி ரெயில் நிலையத்தில் இருந்து அதிகாலையில் சுரண்டை-, கடையத்துக்கு பஸ்கள் இயக்க வேண்டுமென அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

மாலை மலர்

தென்காசி:

தென்காசி- ஊத்துமலைக்கு புதிய வழித்தடத்தில் பஸ் மற்றும் தென்காசி ரெயில் நிலையத்தில் இருந்து அதிகாலையில் சுரண்டை-, கடையத்துக்கு பாவூர்சத்திரம் வழியாக பஸ்கள் இயக்க வேண்டுமென போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:--

ஊத்துமலையிலிருந்து சோலைசேரி, கருவந்தா, அச்சங்குன்றம், லட்சுமிபுரம், பரங்குன்றாபுரம், சுரண்டை வழியாக தென்காசிக்கு புதிய வழித்தடத்தில் டவுன் பஸ் இயக்கிட வேண்டும்.

கொல்லம் ரெயில் வரும் நேரம், பாலருவி ரெயில் வரும் நேரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு  தென்காசி ரெயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு பாவூர்சத்திரம் வழியாக சுரண்டை மற்றும் கடையத்திற்கு நகர பேருந்து இயக்கிட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் ராஜகண்ணப்பன்  உடனடியாக இரண்டு கோரிக்கைகளையும் நிறைவேற்றி கொடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம் தொலைபேசியில் பேசி இந்த வாரமே பஸ் இயக்கப்படும் என உறுதியளித்தார்.