ஆபத்தான நிலையில் உள்ள அங்கன்வாடி மையம். 
உள்ளூர் செய்திகள்

கடையத்தில் ஆபத்தான நிலையில் அங்கன்வாடி மைய கட்டிடம்-நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

கடையத்தில் ஆபத்தான நிலையில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாலை மலர்

கடையம்:

கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழக்கடையம் சின்ன பத்ரகாளியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள அங்கன்வாடி வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது . அங்கன்வாடியில் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இதற்கென்று தனியாக அங்கன்வாடி பணியாளர் இல்லை என கூறப்படுகிறது.ஒரே ஒரு சமையல்காரர் மட்டுமே உள்ளார்.  

அங்கன்வாடி கட்டிடம் மிகவும் பழுதடைந்த சூழ்நிலையில் காணப்படுகிறது. பக்கவாட்டு சுவர்கள் இடிந்த நிலையிலும் அங்கன்வாடியில் பக்கத்தில் அமைந்துள்ள ஓட்டுகட்டிடம் பழுதடைந்த நிலையில் அதில் பொருத்தி உள்ள மர சட்டங்கள் கீழே விழுந்தும், ஓடுகள் தொங்கிய நிலையிலும் காணப்படுகிறது.

கட்டைகள் மற்றும் ஓடுகள் அகற்றப்படாமல் கிடப்பதால் அதனுள்ளே விஷ ஜந்துக்களின் குடியிருப்பாக மாறியுள்ளது. இதனால் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் அங்கன்வாடி பணியாளர்களுக்குமே ஆபத்து உள்ளது.

அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஏதேனும் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் முன் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.