ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் உள்ளன.
இங்கிருந்து தமிழகம் மற்றும் கேரளத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகளில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு சாலைகளும் சேதம் அடைகின்றன. மேலும் கனிம வளங்களை வெட்டி எடுத்து விட்டு அவற்றை மூடாமல் விட்டு விடுவதாகவும், லாரிகளில் ஏற்றி செல்லப்படும் மண் மற்றும் துகள்களால் பாதைகளில் செல்வோர் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
ஏற்கனவே மருதம் புத்தூர், புதுப்பட்டி, அணைந்தநாடர்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் தங்கள் கிராமங்களில் உள்ள கல் குவாரிகளை மூட வேண்டுமெனவும் புதிய குவாரிகள் அமைக்க அனுமதி அளிக்கக் கூடாது எனவும் பல ஆண்டுகளாக கலெக்டர், தாசில்தார் உள்ளிட்டோருக்கு மனுக்களை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலங்குளத்தில் மிகப்பெரிய போராட்டம் ஒன்றும் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று காலை ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் பஸ் நிலையம் அருகே திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக அதிக பாரங்களை ஏற்றிச் சென்ற 10-க்கும் மேற்பட்ட கனரக லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். மேலும் அதன் டிரைவர்களுக்கு லைசென்ஸ், வாகனங்களுக்கான பெர்மிட், இன்சூரன்ஸ் ஆகியவை முறையாக உள்ளதா எனவும் ஆவணங்களை சரிபார்த்தனர்.