ஆலங்குளம்:
ஆலங்குளம் பேரூராட்சி பகுதி கடைகள், உணவகங்களில் சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கங்காதரன் தலைமையில் ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் அம்பாசமுத்திரம் சாலையில் உள்ள கடைகள், உணவகங்களில் திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது குளிர்பானக் கடைகளில் கெட்டுப்போன பழங்கள் மற்றும் எசென்ஸ் ஆகியவற்றை பயன்படுத்தி குளிர்பானம் தயாரித்தது, புரோட்டா கடைகளில் சுகாதாரமற்ற குடிநீர் இருந்தது, பேக்கரிகளில் பிரெட், தின்பண்ட பொட்டலங்கள் தேதி குறிப்பிடாமல் இருந்தது.
சில கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், காலாவதியான தின்பண்டங்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது. அந்தக் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தொடர்ந்து விதி மீறல்களில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் உணவகங்கள், பேக்கரிகளில் கட்டாயம் விலைப் பட்டியல் வைக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.