சீர்காழியில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. 
உள்ளூர் செய்திகள்

சீர்காழியில், ஆசிரியர் கூட்டணி கூட்டம்

4 வழி சான்றுகளை காலதாமதம் இன்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.

சீர்காழி:

சீர்காழியில் தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி மயிலாடுதுறை மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்டத் துணைத் தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். பொறுப்பாளர்கள் ஜெயபாரதி,தேன்மொழி, இன்பரசி, ரவிச்சந்திரன், சசி கோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் விஜயகுமார் வரவேற்றார்.

மாநில செயலாளர் வீரமணி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.

கூட்டத்தில் உதவி பெறும் பள்ளிகளுக்கான நான்கு வழி சான்றுகளை காலதாமதம் இன்றி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்குவது போல் உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் அனைத்து நல திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும், பணியிடை பயிற்சிகளில் ஆசிரியர்களை கருத்தாளர்களாக செயல்படுத்துவதை தவிர்த்து வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் பயிற்சி உள்ளவர்களை ஈடுபடுத்த வேண்டும்,

எமிஸ் வலைதளத்தை பயன்படுத்தி ஒரு பள்ளியில் பயிலும் மாணவர்களை வேறு பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கையை கல்வித்துறை கண்காணிக்க வேண்டும், அரசு வழங்கும் விலையில்லா பொருட்களை ஆசிரியர்களை கொண்டு பள்ளிக்கு எடுத்துச் செல்லும் நடைமுறையை கைவிட்டு அலுவலகப் பொறுப்பில் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கிட வேண்டும், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் எஸ்.எம்.சி ஒப்புதல் இல்லாமல் பள்ளிக்குத் தேவையான துப்புரவு சார்ந்த பொருட்களை தனிப்பட்ட நபர்கள் மூலம் வழங்குவதை தவிர்த்துவிட வேண்டும், ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் எமிஸ் சார்ந்த ஆன்லைன் பதிவுகளை செய்ய ஆசிரியர்களை கட்டாயப்படுத்துவதை அரசு கைவிடவேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

முடிவில் மாவட்ட பொருளாளர் ராஜம் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT