உள்ளூர் செய்திகள்

பெண் ஐ.டி. ஊழியரை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று கற்பழித்த வாலிபர்: திருமணத்துக்கு மறுத்ததால் கைது

பெற்றோருடன் சென்று கேட்ட போது தகாத வார்த்தைகளால் பேசி திருமணம் செய்ய மறுத்து விட்டார்.வாலிபரை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

கோவை:

கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

நான் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறேன். கல்லூரியில் படிக்கும் போது எனக்கு நெய்வேலியை சேர்ந்த புவன் கிருஷ்ணன் (வயது 24) என்ற வாலிபருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் 2 பேரும் கடந்த 5 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தோம். அப்போது புவன் கிருஷ்ணன் என்னை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றார்.

அவர் என்னிடம் திருமணம் செய்வதாக உறுதியளித்து என்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். அதன் பின்னர் என்னை அவர் திருமணம் செய்ய மறுத்தார். பின்னர் புவன் கிருஷ்ணன் என்னிடம் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார்.

இது குறித்து நான் செப்டம்பர் மாதம் 17-ந்தேதி ஏற்கனவே புகார் அளித்தேன். புகாரின் பேரில் போலீசார் அவரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர் என்னை திருமணம் செய்வதாக போலீசாரிடம் கூறினார். ஆனால் தற்போது வரை அவர் என்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றி வருகிறார். இது குறித்து நான் எனது பெற்றோருடன் சென்று கேட்ட போது தகாத வார்த்தைகளால் பேசி திருமணம் செய்ய மறுத்து விட்டார்.

எனவே திருமணம் செய்வதாக உறுதியளித்து என்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த புவன் கிருஷ்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

புகாரின் பேரில் போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து திருமணம் செய்ய மறுத்த புவன் கிருஷ்ணனை கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.