கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட் டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு அவற்றை தடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவையில் இருந்து கோவில்பட்டிக்கு வரும் அரசு பஸ் ஒன்றில் விற்பனை செய்வதற்காக கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையெடுத்து இன்று அதிகாலையில் தனிப்படை போலீசார் கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கோவையில் இருந்து வந்த அரசு பஸ்சில் இருந்து இறங்கி சந்கேத்திற்கிடமான வகையில் நின்று கொண்டு இருந்த வாலிபரை தனிப் படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர் நாலாட்டின் புதூர் ரெயில்வே பீடர் தெருவை சேர்ந்த இசக்கி முத்து (23) என்பதும், அவர் விற்பனைக்காக கஞ்சா பொட்டலங்களை கொண்டு செல்வதும் தெரியவந்தது. இதையெடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் சுமார் 8 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து எங்கிருந்து கஞ்சா வாங்கி வரப்படுகிறது? இதில் வேறு யாருக்கும் தொடர்பு உண்டா? என்பது குறித்து இசக்கிமுத்துவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.