வழக்கு பதிவு 
உள்ளூர் செய்திகள்

இளம்பெண்ணை இருட்டு அறையில் பூட்டி சித்ரவதை- கணவர், கள்ளக்காதலி மீது வழக்கு

தன்னை கொடுமைப்படுத்திய கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர், கள்ளக்காதலி ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளம்பெண் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மாலை மலர்

கோவை:

கோவை பொன்னையராஜபுரத்தைச் சேர்ந்தவர் 26 வயது இளம்பெண்.

இவர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

எனக்கு கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது எனது பெற்றோர் வரதட்சணையான 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் பணம் கொடுத்தனர்.

தினசரி எனது கணவர் மது குடித்து விட்டு வந்து என்னை சித்ரவதை செய்தார். எனது கணவர் மற்றும் குடும்பத்தார் என்னிடம் இருந்த நகைகளை பறித்துக் கொண்டனர்.

மேலும் எனது பெற்றோரிடம் பணம் வாங்கி கொடுக்கும்படி கொடுமைப்படுத்தினர். இதனையடுத்து நான் எனது பெற்றோரிடம் இருந்து ரூ.3 லட்சம் பணத்தை வாங்கி கொடுத்தேன்.

இந்தநிலையில் எனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது எனக்கு தெரியவந்ததும் அவரிடம் கேட்டேன். அப்போது எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த எனது கணவர் எனக்கு உணவு, தண்ணீர் கூட தராமல் இருட்டு அறையில் 2 நாட்களாக அடைத்து வைத்து கொடுமைப்படுத்தினார்.

இதுகுறித்து நான் எனது பெற்றோரிடம் தெரிவித்தேன். அவர்கள் வந்து என்னை மீட்டு சென்றனர்.

எனவே என்னை கொடுமைப்படுத்திய எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர், கள்ளக்காதலி ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

புகாரின் பேரில் கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் இளம்பெண்ணை இருட்டு அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர், கள்ளக்காதலி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.