காவேரிப்பாக்கம்:
பாணாவரத்தை அடுத்த போளிப்பாக்கம் கிராமம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன். கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜீவா (வயது 26) இவர்களுக்கு திருமணமாகி மூன்றரை வருடங்கள் ஆகியிருந்தது. குழந்தை இல்லை.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு வீட்டில் உள்ள படுக்கையறையில் ஜீவா, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாணாவரம் போலீசார், உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து ஜீவாவின் தாயார் சுமதி அளித்த புகாரின்பேரில் பாணாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருமணமாகி 3½ வருடங்களே ஆவதால் ஜீவாவின் தற்கொலை குறித்து கோட்டாட்சியர் பூங்கொடி விசாரணை செய்தார். இதில் ஜீவாவை தற்கொலைக்கு தூண்டியது தெரிய வந்தது.
இதனையடுத்து கணவர் கார்த்திகேயன், மாமனார் நரசிம்மன், மைத்துனர் சிவா ஆகியோரை போலீசார் கைது செய்து வாலாஜா கிளை சிறையிலும் மாமியார் சாந்தியை கைது செய்து வேலூர் மத்திய பெண்கள் சிறையில் அடைத்தனர்.