மதுரை:
மதுரை திருமங்கலம் பி.டி.ராஜா தெருவைச் சேர்ந்த மோகன்குமார் மகன் நவீன்குமார் (வயது 20). இவர் கும்பகோணம் மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார்.
நவீன்குமாருக்கு மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி தெருவைச் சேர்ந்த வாசகம் மகன் சுப்புராஜ் (23) என்பவருடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் சுப்புராஜ் கடந்த 6-ந் தேதி நவீன்குமாருக்கு போன் செய்தார். அப்போது அவர் ‘எங்கள் வசம் அழகான பெண் உள்ளார்’ என்று ஆசைவார்த்தை கூறி அழைத்துள்ளார்.
இதனை நம்பிய நவீன்குமார் நாகமலை புதுக்கோட்டை தென்றல் நகர் இப்ராகிம் மனைவி உமா வைத்தீஸ்வரி என்கிற ஜாகிரா (வயது 24) என்பவர் வீட்டுக்கு புறப்பட்டு வந்தார்.
அப்போது அங்கு சுப்புராஜ் தலைமையில் கும்பல் மறைந்து இருந்தது. அவர்கள் கத்திமுனையில் நவீன்குமாரிடம் 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு விரட்டினர்.
இதுதொடர்பாக நவீன்குமார் நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து சுப்புராஜ், எச்.எம்.எஸ். காலனி நஜித்முகைதீன் (25), பொன்மேனி முனியாண்டி கோவில் தெரு சையது அலி (25) மற்றும் உமா வைத்தீஸ் வரி ஆகிய 4 பேரை கைது செய்தார்.