தற்கொலை 
உள்ளூர் செய்திகள்

சேலம் அழகாபுரத்தில் காதல் தோல்வியால் பெண் என்ஜினீயர் தற்கொலை

சேலம் அழகாபுரத்தில் வாலிபர் திருமணம் செய்ய மறுத்ததால் விரக்தியில் பெண் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மாலை மலர்

சேலம்:

சேலம் சொர்ணபுரி பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவருடைய மகள் பார்கவி (வயது 22). இவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் படித்து முடித்துள்ளார். தொடர்ந்து பல்வேறு இடங்களில் வேலை தேடி வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் பார்கவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அவருடைய உடலை பார்த்து கதறி அழுதனர். தகவல் கிடைத்ததும் அழகாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே அந்த பகுதியினர் ஏராளமானோர் அங்கு திரண்டதால் பரபரப்பு நிலவியது.

பின்னர் பார்கவி உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பார்கவி தங்கியிருந்த அறையில் சோதனை செய்த போது அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது.

அதில், ‘ஐலவ்யூ அப்பா, ஐலவ்யூ அம்மா’ என்று எழுதி இருப்பதுடன், உங்களை போன்ற அன்பான அப்பா, அம்மா கிடைக்கமாட்டார்கள் என்றும், எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் பார்கவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது வாலிபர் ஒருவரை பார்கவி காதலித்ததாகவும், அவர் திருமணம் செய்ய மறுத்ததால் விரக்தியில் பார்கவி தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் வேறு ஏதேனும் காரணம் உண்டா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.