பலி 
உள்ளூர் செய்திகள்

கணவன் தீ வைத்து எரித்ததில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மனைவி பலி

ஊத்துக்கோட்டை அருகே நடத்தை சந்தேகத்தில் மனைவி மீது தீ வைத்த சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

மாலை மலர்

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே கம்மவார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி பிரசன்னா (வயது 30). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

பிரசன்னாவின் நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதேபோல் கடந்த 3 நாட்களுக்கு முன்பும் அவர்களுக்கு இடையே தகராறு உருவானது. இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ் மனைவி பிரசன்னா மீது மண்எண்ணையை ஊற்றி தீவைத்து கொளுத்தினார்.

இதில் உடல் கருகிய பிரசன்னாவை அக்கம், பக்கத்தினர் மீட்டு மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பிரசன்னா பரிதாபமாக இறந்தார்.

இந்த வழக்கில் பிரசன்னாவின் கணவன் சுரேஷ் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.