ராமநாதபுரம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைப்பற்றப்பட்ட கஞ்சா பார்சல்கள் 
உள்ளூர் செய்திகள்

வடமாநில ரெயிலில் 22 கிலோ கஞ்சா கடத்தல் - கழிவறையில் பதுக்கி கொண்டு சென்றது யார்?

விருதுநகருக்கு வந்த வடமாநில ரெயிலில் கஞ்சா கடத்தியது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

ராமநாதபுரம்:

ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களுக்கான போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு ராமநாதபுரத்தில் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு வடமாநில ரெயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ஜாக்குலின், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன், பெரிய கருப்பன் மற்றும் போலீசார் விருதுநகர் சென்றனர்.

விருதுநகர் ரெயில் நிலையத்தில் வட மாநிலத்தில் இருந்து வந்த ரெயிலில் எஸ்-1 பெட்டியின் கழிப்பறை அருகே பயணிகள் முதுகில் தொங்கவிடும் வகையிலான 2 பைகள் கேட்பாரற்ற நிலையில் இருந்தது. அவற்றை பிரித்து சோதனையிட்டபோது 22 கிலோ 600 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.

அவற்றின் மதிப்பு ரூ.2.22 லட்சம் ஆகும். கைப்பற்றப்பட்ட கஞ்சாவை இன்ஸ்பெக்டர் ஜாக்குலின் தலைமையிலான நுண்ணறிவு பிரிவினர் ராமநாதபுரம் கொண்டு வந்தனர். கஞ்சா கடத்தியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.