திருவொற்றியூர்:
அசானி புயல் சின்னம் காரணமாக திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
இந்த நிலையில் எண்ணூர், கே.வி. குப்பம் கடற்கரை பகுதியில் தூண்டில் வளைவு நடுவே 2 அடி உயரம் உள்ள கருங்கல்லால் ஆன விநாயகர் சிலை கரை ஒதுங்கி கிடந்தது.
இதனை கண்ட அப்பகுதி மீனவர்கள் எண்ணூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து திருவொற்றியூர் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து வந்து விநாயகர் சிலையை மீட்டு விசாரணை நடத்தினர். பின்னர் சிலையை திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். விநாயர் சிலையை கடலில் வீசி சென்றவர்கள் யார்? கோவிலில் இருந்து எடுத்து வரப்பட்டதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.