விபத்து 
உள்ளூர் செய்திகள்

ஒரத்தநாடு அருகே வாகனம் மோதி வாலிபர் பலி

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஒரத்தநாடு:

ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரகுவரன் (வயது 25). இவர் தஞ்சையிலுள்ள ஒரு தனியார் போட்டோ ஸ்டுடியோவில் வேலை பார்த்து வருகிறார். அதே தெருவை சேர்ந்த பாரதிதாசன் (24) தஞ்சையில் உள்ள ஒரு ஜவுளி கடையில் கேசியராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் இருவரும் இன்று அதிகாலையில் தஞ்சையில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது தென்னமநாடுசாவடி அருகே வந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். சிறிது நேரத்தில் பாரதிதாசன் பலியானார். தகவல் அறிந்த ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த ரகுவரனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.