வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த விழுதுபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் கட்டிட மேஸ்திரி. இவரது மகன் சக்திவேல் (வயது 19). அதே கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் சக்திவேலுக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் சக்திவேல் அருகில் உள்ள ஏரிக்குச் சென்று மீன்பிடிப்பதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 17 வயது சிறுவன் அங்கு வந்தார்.
இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிறுவன் சக்திவேலை விறகு கட்டையால் அடித்து தாக்கினார்.
இதில் படுகாயம் அடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் 17 வயது சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். வந்தவாசி டி.எஸ்.பி. கார்த்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கீழ்கொடுக்கானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.