உள்ளூர் செய்திகள்

8 மாதங்களுக்கு பிறகு 60 அடிக்கு கீழ் சரிந்த வைகை அணை நீர் மட்டம்

பாசனத்துக்கு தண்ணீர் திறப்பால் 8 மாதங்களுக்கு பிறகு வைகை அணையின் நீர் மட்டம் 60 அடிக்கும் கீழ் சரிந்துள்ளது.தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு தாமதமாவதால் அணையின் நீர் மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கூடலூர்:

தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை கைகொடுத்ததால் 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 70 அடி வரை எட்டியது. அதனைத் தொடர்ந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மழை நின்ற பிறகும் கூட கடந்த ஆகஸ்டு மாதத்தில் இருந்து அணையின் நீர் மட்டம் 60 அடிக்கு மேல் நீடித்து வந்தது. அதன் பிறகு சிவகங்கை மாவட்ட பாசனத்துக்கு கடந்த மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

தற்போது மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர் மட்டம் தற்போது 60 அடிக்கும் கீழ் குறைந்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு தாமதமாவதால் அணையின் நீர் மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 59.48 அடியாக உள்ளது. நீர் வரத்து இல்லை.

பாசனத்துக்கு 800 கன அடி மற்றும் மதுரை மாநகர குடிநீருக்கு 69 கன அடி என மொத்தம் 869 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

நீர் இருப்பு 3507 மி.கன அடியாக உள்ளது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 131.45 அடியாக உள்ளது. வரத்து 3 கன அடி. திறப்பு 400 கன அடி. இருப்பு 5036 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 41.60 அடி. வரத்து 13 கன அடி. இருப்பு 206.64 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 85.28 அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 44.25 அடி.