திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் கருணாநிதி தெருவை சேர்ந்தவர் விஜய் வயது(24), இவர் தனியார் நிறுவன ஊழியர். விஜய் தன் நண்பர்களுடன் மேல் மாடியில் வாடகைக்கு வசித்து வருகிறார். கீழ்தளத்தில் சீனு என்கின்ற நவீன் (20) என்பவர் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு திடீரென சீனு முன்பகை காரணமாக மாடி பகுதிக்கு கையில் கத்தியுடன் சென்றார். அப்போது அங்கிருந்த விஜயை தகாத வார்த்தைகள் பேசி அவரை கைகளால் தாக்கிய பின்னர் கத்தியால் தலையில் வெட்டினார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அங்கிருந்த விஜயின் நண்பர்களையும் தகாத வார்த்தைகள் பேசி கத்தியை காட்டி கொலை செய்துவிடுவதாக மிரட்டினார்.
இதில் பலத்த காயமடைந்த விஜய் திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து விஜய் மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சீனு என்ற நவீனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.