பெண் தற்கொலை 
உள்ளூர் செய்திகள்

திருப்பூரில் எலிமருந்தை தின்று பெண் தற்கொலை- மகனுக்கு தீவிர சிகிச்சை

திருப்பூரில் கடனை திருப்பி கேட்டு மிரட்டியதால் எலிமருந்தை தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார். மகனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாலை மலர்

அனுப்பர்பாளையம்:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த வடகாட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி புஷ்பம் (வயது 58). இவர்களது மகன் ராஜபாண்டி (36). இவர்கள் திருப்பூர் கொங்கு மெயின் ரோடு வ.உ.சி.நகர் பகுதியில் வசித்து வந்தனர்.ராஜபாண்டி அதே பகுதியில் சிறிய அளவில் பனியன் நிறுவனம் நடத்தி வந்தார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராமர் என்பவரிடம் ராஜபாண்டி ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் வட்டிக்கு கடன் வாங்கியிருந்தார். மேலும் வாங்கிய தொகைக்கு பலமடங்கு அதிகமாக வட்டி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த 9-ந்தேதி ராஜபாண்டி வீட்டிற்கு சென்ற ராமர் தனக்கு தர வேண்டிய பணத்தை கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால் மனமுடைந்த புஷ்பம், ராஜபாண்டி ஆகியோர் எலி மருந்து தின்று மயங்கி விழுந்தனர்.

இதையடுத்து 2பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே தீவிர சிகிச்சை பெற்று வந்த புஷ்பம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். ராஜபாண்டி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் விசாரணை நடத்தி பணம் கேட்டு மிரட்டியதாக ராமர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.