திண்டிவனம்:
திண்டிவனம் அருகே ஆவணிப்பூர் சாலையில் டீசல் கடத்தி செல்லப்படுவதாக ஒலக்கூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேனில் 180 லிட்டர் கொள்ளளவு கொண்ட 11 பேரல்களில் 2200 லிட்டர் டீசல் கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது.
விசாரணையில் செய்யூர் தாலுகா தழுதாளிக்குப்பம் முதல் தெருவை சேர்ந்த சிவகுமார் என்பவர் செங்கல்பட்டு மாவட்டம் கோட்டைக்காடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிலிருந்து மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் டீசலை வாங்கி கிரஷருக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக எடுத்து சென்றது தெரியவந்தது.
மேலும் வாகனத்தை ஓட்டி வந்த செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த லோகநாதன், சிவகுமார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 2200 லிட்டர் டீசல் கடத்திய வேனும் கைப்பற்றப்பட்டது.