புள்ளிமானை வேட்டையாடி தூக்கிச்சென்ற புலி 
உள்ளூர் செய்திகள்

முதுமலையில் புள்ளிமானை வேட்டையாடி தூக்கிச்சென்ற புலி- சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி

முதுமலையில் புள்ளிமானை வேட்டையாடி தூக்கிச்சென்ற புலியை கண்டு அதிர்ச்சி அடைந்த சுற்றுலா பயணிகள் இந்த காட்சியை தங்களது செல்போன்கள் மற்றும் கேமராக்களில் புகைப்படம் எடுத்தனர்.

மாலை மலர்

நீலகிரி:

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை தெப்பக்காடு பகுதியில் வனஆர்வலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வனத்துறை உதவியுடன் வனப்பகுதிக்குள் சென்றனர். அப்போது அந்த சாலையோரத்தில் மான்கள் மேய்ந்து கொண்டு இருந்தனர்.

அந்த நேரத்தில் திடீரென்று அங்கு பாய்ந்து வந்த ஒரு புலி, புள்ளிமானை வேட்டையாடியது. பின்னர் அதை தூக்கி புதருக்குள் கொண்டு சென்றது. இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த சுற்றுலா பயணிகள் இந்த காட்சியை தங்களது செல்போன்கள் மற்றும் கேமராக்களில் புகைப்படம் எடுத்தனர். அத்துடன் சிலர் செல்போனில் வீடியோவும் எடுத்தனர்.

பிறகு அதை சமூக வலைத் தளத்தில் பதிவேற்றம் செய்தனர். இதனால் அந்த காட்சி வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, புலியை கூண்டில் அடைத்து பூங்காவில் வைத்து இருப்பதை பார்க்கும் போதே பயமாக இருக்கும். ஆனால் அது வனப்பகுதியில் கம்பீரமாக நடந்து வந்து, இரையை வேட்டையாடி தூக்கிச்சென்றதை பார்த்தபோது பயமாகதான் இருந்தது என்றனர்.