முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் விசாரணை ஆணையத்தில் ஆஜராக வந்த காட்சி. 
உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஒருநபர் விசாரணை ஆணையத்தில் கிரிஜா வைத்தியநாதன் ஆஜர்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 36-வது கட்ட விசாரணையில் முதல் நாளான இன்று முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆணையத்தின் முன் ஆஜரானார்.

மாலை மலர்

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் கமி‌ஷனை அமைத்தது.

இந்த விசாரணை ஆணையம் மாதம் தோறும் தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி 35 கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் 36-வது கட்ட விசாரணை இன்று தொடங்கியது. இந்த விசாரணையில் ஆஜராவதற்காக முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், முன்னாள் உள்துறை செயலாளர் நிரஞ்சன்மார்டி, முன்னாள் டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன் உள்ளிட்ட 7 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

36-வது கட்ட விசாரணையில் முதல் நாளான இன்று முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வந்தார். அவர் ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து வருகிற 18-ந்தேதி வரை 5 நாட்கள் விசாரணை நடக்கிறது.