விபத்து 
உள்ளூர் செய்திகள்

திருக்கோவிலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி 2 பேர் பலி

திருக்கோவிலூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருக்கோவிலூர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டையை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் எழில் (வயது 28), பெரியான் என்பவரது மகன் தினேஷ் குமார் (25), மணி என்பவரது மகன் பிரகாஷ் (27) ஆகிய 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் நேற்று நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் திருக்கோவிலூர் நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.

சாங்கியம் கிராமம் அருகே சென்றபோது அப்போது அவ்வழியாக மணலூர்பேட்டை நோக்கி வந்த வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

இந்தவிபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த எழில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த தினேஷ் குமார், பிரகாஷ் ஆகியோரை உயிருக்கு போராடினர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உளளவர்கள் ஓடிவந்தனர். உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தினேஷ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிரகாஷ் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, மணலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் இறந்து போனவர்களின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.