மேற்கூரை இடிந்து விழுந்த வீடு. 
உள்ளூர் செய்திகள்

போளூரில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பள்ளி மாணவன் மரணம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் இன்று அதிகாலையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மாலை மலர்

போளூர்:

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அங்காள பரமேஸ்வரி பகுதியைச் சேர்ந்தவர் செல்வி (வயது 40). இவரது கணவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

வினோத்குமார் (17) அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தம்பி தினகரன் (16). அதே பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

இவர்கள் இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென்று வீட்டின் மேற்கூரை இடிந்து வினோத்குமார், தினகரன் மீது விழுந்தது.

இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு போளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தினகரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

வினோத் குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.