பள்ளி மாணவிகள் 
உள்ளூர் செய்திகள்

புதுவையில் பள்ளி- கல்லூரிகள் திறப்பு

பொதுத்தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவர்களுக்கு வருகிற 19-ந் தேதி முதல் திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது.

மாலை மலர்

புதுச்சேரி:

உலகம் முழுவதும் கொரோனா ஒமைக்ரான் வைரசாக பரவ தொடங்கியது.

இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது.

இதேபோல புதுவையிலும் கடந்த மாதம் 10-ந் தேதி முதல் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மூடப்பட்டது. தொடர்ந்து 10-ம் வகுப்பு முதல் கல்லூரிகள் வரை 18-ந் தேதி மூடப்பட்டது. ஆன்லைனில் வகுப்புகள் நடந்து வந்தது.

வேகமாக பரவ தொடங்கிய கொரோனா தொற்றின் வேகம் குறைய தொடங்கியது. படிப்படியாக தொற்று பரவல் குறைந்து வருகிறது. இதனால் மீண்டும் பள்ளி- கல்லூரிகளை திறக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி புதுவையில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் இயங்க தொடங்கியது.

கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பள்ளிக்கு வரும் மாணவர்கள் முக கவசம் அணிந்து வந்தனர்.

அவர்களுக்கு வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டு, கிருமி நாசினி வழங்கப்பட்டு பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியுடன் மாணவர்கள் அமர வைக்கப்பட்டனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மதிய உணவுக்காக தங்கள் வீடுகளில் இருந்து தட்டு, தம்ளர் கொண்டு வந்தனர். பள்ளிகள் வாரத்தில் 6 நாட்கள் இயங்க கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால் வருகை பதிவேடு கட்டாயமில்லை. வகுப்புக்கு வராத மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இருப்பினும் பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்கு வந்திருந்தனர். இறை வணக்கம், கலை நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் மாணவர்களை அழைத்து வரும் வாகனங்களை நாள்தோறும் சுத்தப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவர்களுக்கு வருகிற 19-ந் தேதி முதல் திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது.

பள்ளிகள் திறப்பையொட்டி காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. பெற்றோர்கள் தங்கள் வாகனங்களில் நகர்புறத்தில் உள்ள பள்ளிகளுக்கு குழந்தைகளை அழைத்து சென்றனர்.