சேலம்:
உக்ரைன் மீது 2-வது நாளாக ரஷியா வான்வெளி, தரை வழி மற்றும் கடல் வழி தாக்குதலை நடத்தி வருகின்றது. இரு நாடுகளுக்கான போர் 3-வது உலக யுத்தத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில் உலக நாடுகள் இருக்கின்றன.
இந்த நிலையில் பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் ரஷியாவை கண்டித்து வரும் நிலையில் சேலத்தை சேர்ந்த கல்லூரி மாணவி தயானி, ரஷிய பிரதமரின் அரசு தலைமை ஊடகத்துறை மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.
ரஷிய பிரதமருக்கு இந்திய மக்களின் சார்பில் எனது பணிவான வேண்டுகோள். அண்டை நாடான உக்ரைன் மீது நடத்தும் தாக்குதலை உடனடியாக நிறுத்தி அந்நாட்டு மக்களின் உயிரைக் காப்பாற்றுங்கள். ரஷ்யா நாட்டு மக்கள் மிக அழகானவர்கள், அன்பானவர்கள்.
இப்படியான நிலையில் மனித மரணம் என்பது இக்கால கட்டத்தில் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலால் பல நாடுகளில் பல கோடி மக்கள் உயிரிழந்தனர்.
அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்து பல நாடுகளில் இன்று வரை ஒரு வேளை உணவுக்குக் கூட வழியின்றி பலர் துயரத்துடன் வாழ்ந்து வரும் நிலையில் அண்டை நாடான உக்ரைன் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலால் உலகளவில் மீண்டும் பல நாடுகள் பொருளாதாரத்தில் முகவரி தெரியாமல் போகும் அபாய நிலை ஏற்படும்.
எந்த நாடாக இருந்தாலும் யாராக இருந்தாலும் அனைவரும் இறைவனால் இவ்வுலகத்தில் படைக்கப்பட்டவர்கள். மனிதநேயத்தையும் சமாதானத்தையும் மட்டும் பின்பற்றும் இந்திய நாட்டு மக்கள் சார்பில் தங்களிடம் தாழ்மையோடு தங்களின் பாதம் பணிந்து வேண்டி கேட்டுக் கொள்கின்றேன்.
தயவு செய்து உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்துங்கள். இந்த திடீர் தாக்குதலால் பலர் வீணாக உயிரிழக்கின்றனர்.உயிர் பலியற்ற உலகமாக மனித நேயத்துடன் வாழ அனைத்து நாட்டு மக்களும் ஒன்றுபடுவோம். நீங்கள் கண்டிப்பாக என் கோரிக்கையை ஏற்ப்பீர்கள் என மனதார நம்புகின்றேன். உங்களை கடவுள் ஆசிர்வதித்து மென்மேலும் பலப்படுத்த பிரார்த்தனை செய்கின்றேன்."
இவ்வறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்...உக்ரைன் போர் - இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா?