மதுரை:
மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி போலீஸ் சரகம் வேடர் புளியங்குளத்தைச் சேர்ந்தவர் செல்வம் மகன் வீரமணி (வயது 24). இவர் சிட்கோவில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று தோப்பூர் ஒயின்ஷாப் பின்புறம் உட்கார்ந்து வீரமணி மது அருந்தினார். அப்போது 2 பேர் அங்கு வந்து மது கொடுத்துள்ளனர். வீரமணி நிறைய மது குடித்ததால் சுயநினைவை இழந்து விட்டார். அப்போது அந்த 2 பேரும் வீரமணியை வீட்டுக்கு கொண்டு சென்று விட்டனர்.
காலையில் வீரமணி எழுந்து பார்த்தபோது செல்போன் மற்றும் ஏ.டி.எம். கார்டு, பான்கார்டு, லைசென்ஸ் தொலைந்து விட்டது தெரியவந்தது. பின்னர் தனது செல்போனுக்கு போன் செய்தபோது கைத்தறி நகரிலிருந்து ஆனந்த் என்பவர் பேசியுள்ளார். அவருக்கு செல்போன் எப்படி கிடைத்தது என்று கேட்டதற்கு, பால்வாடி அருகே கிடந்ததாக சொன்னார்.
இதனைத்தொடர்ந்து வீரமணி அங்கு சென்று தனது செல்போனை வாங்கி பார்த்தபோது அதில் இருந்து போன் பே செயலியை பயன்படுத்தி தனது வங்கி கணக்கில் இருந்து வேறு ஒருவரின் எண்ணுக்கு ரூ. 40 ஆயிரம் அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்தது.
இது குறித்து ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் வீரமணி புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மோசடியில் ஈடுபட்ட கூத்தியார்குண்டு அழகு ராஜா (24) நிலையூர் சேர்ந்த சந்திரபிரபு (27) ஆகியோரை கைது செய்தனர்.