நத்தம்:
நத்தம் அண்ணாநகர் தெற்கு பகுதியில் ஏராளமான புளிய மரங்கள் உள்ளன. அதில் உள்ள ஒரு மரத்தின் கிளையில் பறவை ஒன்று தொங்கி கொண்டிருந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள், அந்த பறவையை பிடித்தனர். அது, அரிய வகை ஆந்தை இனத்தை சேர்ந்தது என்று தெரியவந்தது.
வழக்கமாக வனப்பகுதியில் சுற்றித்திரியும் ஆந்தைக்கும், இதற்கும் வித்தியாசம் இருந்தது. அதாவது மூக்கு, கண்கள் உள்ளிட்ட முகசாயல் மாறுபட்டு இருந்ததை கண்டு பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனச்சரக அலுவலர் பாஸ்கரன், வனக்காப்பாளர் பாக்கியலட்சுமி ஆகியோர் தலைமையிலான வனத்துறையினர் அங்கு விரைந்தனர். பின்னர் அவர்கள் ஆந்தைக்கு இரை மற்றும் தண்ணீர் வழங்கினர். சிறிதுநேரத்தில் ஆந்தை பறந்து செல்லும் நிலைக்கு வந்து விட்டது. இதனையடுத்து அருகே உள்ள வனப்பகுதியில் ஆந்தையை வனத்துறையினர் விட்டனர்.