ராஜாக்கமங்கலம்:
குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள அனந்தநாடார் குடி பகுதியைச் சேர்ந்தவர் மெர்லின் ஜெயபால்.
இவரது மனைவி சுனிதா (வயது 38). இவர் முட்டம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். தினமும் வீட்டில் இருந்து சுனிதா பஸ்சில் வேலைக்குச் சென்று வருகிறார்.
இன்று காலையும் வழக்கம் போல் அவர் வீட்டில் இருந்து புறப்பட்டார். காலை 8.45 மணிக்கு அனந்தநாடார் குடியில் இருந்து புறப்பட்ட 14பி அரசு பஸ்சில் சுனிதா ஏறினார்.
அந்த பஸ்சில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. ஒவ்வொரு நிறுத்தத்தில் பயணிகள் ஏறி, இறங்கும் போது சுனிதா அங்கும் இங்குமாக நகர்ந்துள்ளார்.
இந்த நிலையில் பஸ், ராஜாக்கமங்கலம் வந்த போது, சுனிதா தனது கழுத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் அணிந்து இருந்த 7 பவுன் தங்க சங்கிலி மாயமாகி இருந்ததே அதற்கு காரணம். பஸ்சுக்குள் கூட்ட நெரிசலில் அதனை யாரோ அபேஸ் செய்ததை அறிந்து அவர் கூச்சலிட்டார்.
நகையை அபேஸ் செய்தது யார்? என்பது குறித்து தெரியவில்லை. இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து, ராஜாக்கமங்கலம் போலீசில், சுனிதா புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து ஓடும் பஸ்சில் நகையை அபேஸ் செய்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.