சென்னை:
காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் நமச்சிவாயம். ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர். இவர் ரெயில்வே துறையில் தொழில்நுட்ப பணியில் கடந்த 1974-ம் ஆண்டு மார்ச் மாதம் 1-ந்தேதி சேர்ந்தார். 42 ஆண்டுகள் இவர் ரெயில்வே துறையில் மின்சார கம்பியில் ஏற்படும் கோளாறுகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இவர் பணியின்போது சரக்கு ரெயிலில் இருக்கும் குறைபாடுகளை கண்டுபிடித்து முன்கூட்டியே எச்சரித்து விபத்துக்களை தடுத்துள்ளார். 42 ஆண்டுகள் பணியின்போது அவர் 17 முறை சரக்கு ரெயில் விபத்தை தடுத்துள்ளார்.
இதையடுத்து இவருக்கு ‘மேன் ஆப்தி ரெயில்வே’ உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ந்தேதி ஓய்வு பெற்றார். இந்த நிலையில் ரெயில்வே துறையில் பல அரிய சேவைகளை செய்துள்ள நமச்சிவாயத்துக்கு அவர் ஓய்வு பெற்ற பிறகும் விருது வழங்கப்பட்டு வருகிறது.
ஹியூமர் கிளப் இண்டர் நேஷனல் என்ற சமூக அமைப்பு தென்கச்சி கோ. சுவாமிநாதன் நினைவாக வழங்கப்படும் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது 2022’ என்ற விருதை நமச்சிவாயத்துக்கு வழங்கி கவுரவித்துள்ளது.