நெல்லை:
தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளா மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கும் தினமும் ஏராளமான கனரக லாரிகளில் கனிமவளங்கள் ஏற்றி செல்லப்படுகிறது.
தினமும் தமிழக கேரள எல்லையான புளியரை சோதனை சாவடி வழியாக கொண்டு செல்லப்படும் இந்த கனிம வளங்கள் அளவுக்கு அதிகமாக கடத்தப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.
அதன் காரணமாக சாலைகள் சேதமடைதல், உயிரிழப்பு, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தின் கனிமவளம் அடியோடி அழிந்துவிடும் அபாயம் இருப்பதாகவும், கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த கோரியும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் தலைமையில் புளியரை சோதனை சாவடியில் இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று காலை புளியரை சோதனை சாவடியில் ரவி அருணன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு சாலைமறியலுக்கு முயன்றனர். ஆனால் அந்த மறியலுக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. ஆனாலும் அனுமதியை மீறி சாலைமறியலுக்கு முயன்றதால் போலீசார் அவர்களை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.