திருச்சி:
திருச்சி திருவெறும்பூர் நவல்பட்டு கிழக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (வயது 28). இவருக்கும் நவல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடமாடும் மருத்துவமனையில் உதவி நர்சாக பணியாற்றி வரும் ஷர்மிளா தேவி (21) என்பவருக்கும் கடந்த மே 22ந் தேதி திருமணம் நடந்தது.
பின்னர் புதுமண தம்பதிகள் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தனர். கணவர் வீட்டில் இருந்து ஷர்மிளாதேவி தினமும் வேலைக்கு சென்று வந்தார். நேற்று காலை வழக்கம்போல் அவர் வேலைக்கு புறப்பட்டு சென்றார்.
பின்னர் மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அரவிந்த் மனைவியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் மாயமான தனது மனைவியை தேடி கண்டுபிடித்து தருமாறு கூறியுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஷர்மிளா தேவியை மர்ம நபர்கள் யாரேனும் கடத்திச் சென்று விட்டார்களா? அல்லது காதல் விவகாரத்தில் கணவரை தவிக்க விட்டு ஓட்டம் பிடித்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் மாயமான சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.