பொன்னேரி:
மீஞ்சூர் பஜார் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் சென்னை தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு பணியில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவருடைய மனைவி பூர்ணிமா, இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். பூர்ணிமா-ராஜேந்திரன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் ராஜேந்திரன் தனது மனைவியிடம் விவாகரத்து கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று மதியம் ராஜேந்திரன் விவகாரத்து நோட்டீசில் கையெழுத்திடுமாறு மனைவியிடம் கூறினார். இதற்கு பூர்ணிமா மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன் தனது மனைவி பூர்ணிமாவின் இடது கை மற்றும் வயிற்றில் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் வயிற்றில் சிக்கிய கத்தி வெளியே வராமல் அதன் கைப்பிடி மட்டும் ஊருவி வெளியே வந்தது.
இந்த தாக்குதலில் தடுக்க முயன்ற மகள் பத்மினிக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் பூர்ணிமாவும், மகள் பத்மினியும் ரத்த வெள்ளத்தில் சரிந்தபடி அலறி துடித்தனர்.
சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிய தாய், மகளை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே போலீஸ்காரர் ராஜேந்திரன் மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். விவாகரத்து நோட்டீசில் கையெழுத்து போடாததால் மனைவி மற்றும் மகளை கத்தியால் குத்தியதாக தெரிவித்து உள்ளார்.
இதையடுத்து போலீஸ்காரர் ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.