கோவை:
கோவை மத்திய ஜெயிலில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.
ஜெயிலுக்குள் கைதிகள் செல்போன் பயன்படுத்த தடை செய்யப்பட்டு உள்ளது. ஜெயில் நிர்வாகம் சார்பில் கைதிகள் அவர்களது குடும்பத்தினருடன் பேச போன் வசதி செய்யப்பட்டு உள்ளது. இதனை மீறி சில கைதிகள் செல்போன்களை மறைத்து வைத்து பயன்படுத்தி ஜெயிலுக்குள் இருந்து வெளியில் உள்ளவர்களிடம் தொடர்பு கொண்டு பல்வேறு சதி திட்டங்களை செய்து வருகின்றனர்.
மேலும் கஞ்சா, பீடி, சிகரெட், புகையிலை பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை மீறி சில கைதிகள் புகையிலை பொருட்களை மறைத்து வைத்து பயன்படுத்தி வருகின்றனர். இதனை தடுப்பதற்காக போலீசார் மாதத்தில் ஒருநாள் ஜெயிலுக்கு சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் கோவை மாநகர காட்டூர் சரக உதவி கமிஷனர் வின்சென்ட் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் கோவை மத்திய ஜெயிலுக்கு இன்று காலை 6 மணிக்கு சென்றனர். அவர்கள் ஜெயில் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டு உள்ள அறைகளுக்கு சென்று செல்போன், கஞ்சா, சிகரெட், பீடி போன்றவற்றை மறைத்து வைத்து பயன்படுத்துகிறார்களா? என சோதனை செய்தனர். இந்த சோதனை 7 மணி வரை ஒரு மணி நேரம் நடந்தது. சோதனையில் எந்த பொருட்களும் கைப்பற்றப்படவில்லை.