ஆர்ப்பாட்டம் 
உள்ளூர் செய்திகள்

தமிழகம் முழுவதும் ஓய்வூதியர்கள் 26-ந் தேதி ஆர்ப்பாட்டம்

பல்வேறு கொள்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஓய்வூதியர்கள் வருகிற 26-ந் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சென்னை:

மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர்களின் ஒருங்கிணைப்பு குழுவின் பொதுச்செயலாளர் ராகவேந்திரன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

77 மாத அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும், ஓய்வூதியம் உயர்த்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றோர், குடும்ப ஓய்வூதியதாரர்கள் பல வருடங்களாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசு அவர்களின் கோரிக்கையை பரிசீலிக்க மறுத்து வருகிறது.

போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் இயக்கங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் ஆதரவு இயக்கங்களை நடத்திட மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புக்களின் ஒருங்கிணைப்பு குழு முடிவு செய்துள்ளது. இதன்படி வருகிற 26ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அடுத்த கட்டமாக சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.