நெல்லை:
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் களக்காடு முண்டந்துறையில் 895 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட புலிகள் காப்பகம் அமைந்துள்ளது.
இங்கு ஆயிரக்கணக்கான அரிய வகை மூலிகைகள், விலங்குகள் உள்ளிட்டவை உள்ளன. மேலும் களக்காடு தலையணை, மணிமுத்தாறு அருவி, அகஸ்தியர் அருவி, பாண்டியன் கோட்டை, சொரிமுத்து அய்யனார் கோவில் உள்பட பல்வேறு சுற்றுலா தளங்களும் உள்ளன.
இந்நிலையில் முண்டந்துறை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது அங்கு சூழல் சுற்றுலாவுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இங்கு பயணிகள் சுற்றுலா செல்வதற்கு http://www.kmtrecotourism.com என்ற இணைய தளம் தொடங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் சுற்றுலா பயணிகள் தங்களுக்கு தேவையான வகையில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதில் புலிகள் காப்பகம் குறித்த தகவல்கள் அடங்கி உள்ளது. அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சுற்றுலா திட்டங்களை தேர்ந்தெடுக்கலாம்.
ஒன்று முதல் 3 நாட்கள் வரை தங்கி சுற்றுலா செல்லும் திட்டமும் இதில் உள்ளது. அதற்கேற்ப கட்டணம் வசூல் செய்யப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வசதிகள் செய்ய திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை ரசிக்க முடியும்.