உள்ளூர் செய்திகள்

மரக்காணம் அருகே சிறுமி திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எம்.புதுப்பாக்கம் கிராமத்திற்கு சென்று சிறுமியின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினர்.விசாரணையில் சிறுமிக்கு திருமணம் நடைபெற இருப்பது உண்மை என தெரியவந்தது.

Suresh K Jangir

மரக்காணம்:

மதுராந்தகம் அருகே உள்ள தென்னலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. அவரது மகன் வீரபாண்டி (வயது (26)). இவருக்கும் மரக்காணம் அருகே எம்.புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இரு வீட்டாரின் சம்மதத்தோடு இன்று மதுராந்தகம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக சைல்ட் லைனுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி மரக்காணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயரங்கன், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் தலைமை காவலர், சமூக நலத்துறை அலுவலர்கள், வருவாய் துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேற்று இரவு எம்.புதுப்பாக்கம் கிராமத்திற்கு சென்று சிறுமியின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் சிறுமிக்கு திருமணம் நடைபெற இருப்பது உண்மை என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர். அதன் பின்னர் சிறுமியை மீட்டு விழுப்புரத்தில் உள்ள குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.