ஓ.பன்னீர்செல்வம் 
உள்ளூர் செய்திகள்

ஜெயலலிதா மரணம் குறித்து கேட்ட கேள்விகளுக்கு உண்மையான பதிலை அளித்துள்ளேன் - ஓபிஎஸ் பேட்டி

சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நாள் முதல் எக்மோ கருவி அகற்றும் வரை ஜெயலலிதாவை நான் பார்க்கவில்லை என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

மாலை மலர்

சென்னை:

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரணைக்காக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்றும் இன்றும் ஆஜரானார். இரு நாட்களிலும் சுமார் 9 மணி நேரம் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடைபெற்றது. விசாரணையில் பரபரப்பான பல்வேறு வாக்குமூலங்களை அளித்தார். 

இந்நிலையில், விசாரணை முடிந்தபின் செய்தியாளர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஆறுமுகசாமி ஆணையம் மற்றும் எதிர்தரப்பு கேள்விகளுக்கு உரிய பதில்கள் அளித்துள்ளேன்.

ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் கேட்ட கேள்விகளுக்கு உண்மையான பதிலை அளித்துள்ளேன். 

ஆறுமுகசாமி ஆணையம் 7 தடவை எனக்கு சம்மன் அனுப்பியது. அதில் 6 முறை மட்டுமே கடிதம் வந்தது. 2 முறை மட்டுமே ஆஜராக முடியாத சூழல் ஏற்பட்டதால் காரணத்தை ஆணையத்திடம் விளக்கினேன்.

என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளேன். ஆணையத்தின் விசாரணை திருப்தியாக உள்ளது. முரண்பட்ட பதில் எதையும் நான் ஆறுமுகசாமி ஆணையத்தில் தெரிவிக்கவில்லை.

சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நாள் முதல் எக்மோ கருவி அகற்றும் வரை ஜெயலலிதாவை நான் பார்க்கவில்லை. 

எனக்கு தனிப்பட்ட முறையில் சசிகலா மீது மதிப்பும் மரியாதையும் உண்டு என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்...நிதி பற்றாக்குறை குறைக்கப்படும்- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில்