நிலக்கோட்டை:
நிலக்கோட்டை - அணைப்பட்டி சாலையில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் காய்கறிகள், அரிசி, வீட்டு உபயோகப் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களை சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.
இதற்கான ஏலம் பேரூராட்சி மூலம் நடைபெற்று ஒரு மூடைக்கு ரூ.10 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் வாரச்சந்தை கூடியது.
அப்போது நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக வசூல் செய்யத் தொடங்கினர். மேலும் வாரச்சந்தைக்கு வியாபாரிகள், விவசாயி களின் வாகனங்களை அனுமதிக்கவில்லை. இதனால் வாகனங்கள் அனைத்தும் சரக்குகளை இறக்காமல் அங்கேயே நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக விவசாயிகள் மற்றும் வாரச்சந்தை நடத்துபவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த வியாபாரிகள் நிலக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. சம்பவம் குறித்து அறிந்ததும் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் தலைமையில் போலீசார் விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். வியாபாரிகளின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறினர். இதனை தொடர்ந்து வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். * * * நிலக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்திய வியாபாரிகள்.