சேதம் அடைந்துள்ள கார் கண்ணாடியை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தும் சிறுவர்கள்- கண்காணித்து நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

ஈரோடு ஸ்டோனிபாலம் ஈ.வி.என்.ரோட்டில் போக்குவரத்து எப்போதும் பரபரப்பாக காணப்படும். சிறுவர்கள் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஈரோட:

ஈரோடு ஸ்டோனிபாலம் ஈ.வி.என்.ரோட்டில் போக்குவரத்து எப்போதும் பரபரப்பாக காணப்படும். ரெயில் நிலையம் அருகில் இருப்பதால் இரவு, பகலாக வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த நிலையில் நேற்று இரவு சாலையோரமாக நின்றிருந்த சிறுவர்கள் சிலர் திடீரென அந்த வழியாக சென்ற வாகனங்களின் மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர். குறிப்பாக அந்த வழியாக சென்ற கார்களின் மீது கற்களை வீசி கண்ணாடியை உடைக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர்.

இதில் 5 கார்களின் கண்ணாடிகள் உடைந்தன. மேலும் ஒருவர் காயம் அடைந்தார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் அரசு தலைமை மருத்துவமனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

போலீஸ் வருவதை அறிந்ததும் அந்த சிறுவர்கள் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

இந்த பகுதியில் சில சிறுவர்கள் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்டு வருகிறார்கள். வாகனங்களின் மீது கல்வீசி தாக்குதல் சில நாட்களாக நடந்து வருகிறது.

இந்த சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் 16 முதல் 18 வயது உடையவராக இருக்கிறார்கள். இவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அங்கு கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தி போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT