விபத்து 
உள்ளூர் செய்திகள்

தியாகதுருகம் அருகே மொபட் மோதி கூலி தொழிலாளி பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே மொபட் மோதியதில் கூலி தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே புது பல்லகச்சேரி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வைத்திலிங்கம் (வயது 55) கூலி தொழிலாளி.

இவர் வீட்டில் இருந்து தியாகதுருகத்திற்கு வார சந்தைக்கு செல்வதற்காக சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது கலையநல்லூர் அருகே உள்ள சர்ச் அருகே சென்றபோது அவருக்கு பின்னால் வந்த மொபட் மோதியதில் வைத்திலிங்கம் தலையில் அடிபட்டு படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்து போனார்.

இதுகுறித்து அவரது மனைவி விஜயா கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் மொபட் ஓட்டி வந்த பழைய பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் (55) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.