விபத்து 
உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த 2 வாலிபர்கள் பலி- ஒருவருக்கு தீவிர சிகிச்சை

நாகை அருகே வேகத்தடையில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த 2 வாலிபர்கள் உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

நாகப்பட்டினம்:

நாகை அருகே தெற்கு பொய்கைநல்லூர் நடுத்தெருவை சேர்ந்தவர் வைரக்கண்ணு மகன் மணிமாறன் (வயது21). அதே தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் ஹரிஹரன்(21).

மணிமாறன், ஹரிஹரன் ஆகிய இருவரும் தனது நண்பர் மனோஜ்குமாருடன் இன்று காலை ஒரே மோட்டார் சைக்கிளில் தெற்கு பொய்கைநல்லூர் பைலட் கடை அருகே சென்றபோது வேகத்தடையில் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே மணிமாறன் இறந்து விட்டார்.

படுகாயமடைந்த ஹரிஹரன் மற்றும் அவரது நண்பரை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி ஹரிஹரனும் இறந்தார். மனோஜ்குமார் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.